Sunday, January 1, 2017

ஊழல் அரசு தொடர்ந்து வாழ்வதற்கு, சமூக சேவை அமைப்புகளின் செயற்பாடுகள் பாரிய பங்களிப்பு செய்கின்றது.

ஊழல் நிறைந்த அரசு தொடர்ந்து வாழ்வதற்கு, சமூக சேவை அமைப்புகளின் சரியான சிந்தனை இல்லாத சில செயற்பாடுகள் பாரிய பங்களிப்பு செய்கின்றது.

அரசு,அரசியல் என்பது மக்களின் நலன்களை பேணி பாதுகாப்பதாகும். மக்களிடம் வரிப்பணத்தை வசூழித்து அதனைக்கொண்டு சரியான திட்டமிடல், முகாமை பொறிமுறையின் கீழ் அரசு செயற்படுவதன் மூலமே சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறனதொரு சரியான பொறிமுறை இல்லாத ஊழலையே தொழிலாக கொண்ட அரசியல், நிர்வாக தலைமைகளையும் கொண்ட ஓட்டை பொறிமுறையை கேள்விக்கும் அழுத்தத்திற்கும் உட்படுத்தி தோலுரிக்கின்ற எந்த செயற்பாடுகளுமின்றி, அரசு பொதுமக்களின் வரிப்பணத்தை கொண்டு செய்ய வேண்டிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை சமூக சேவை என்ற பெயரில் வரிப்பணம் செலுத்திய அதே பொதுமக்களிடம் போய் உண்டியல் குலுக்கி பொதுமக்களின் தலையில் இந்த சமூக சேவை அமைப்புக்கள் போடுவது ஊழல் அரசு தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு ஆயுட்காப்புறுதியாகும்.

இந்த பதிவின் நோக்கம் சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவர்களது இஹ்லாஷை குறை காண்பதோ அல்ல, மாறாக சரியான சிந்தனைப் புரிதலுடனான செயற்படுகளில் சமூக சேவையாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என்பதுவே.

தர்மம் செய்யும் சிந்தனையும், மனிதாபிமானமும் எமது சமூகத்திடம் காணப்படுவது சந்தோஷத்திற்குரிய விடயம் தான். அதை பயனபடுத்தி “அரசு செய்ய வேண்டியதை பொதுமக்கள் தர்மம் மூலம் துடைத்தெறிவோம்” என்ற கோஷமும் செயற்பாடும் பிழையானது அநீதியானது. இச்செயற்பாட்டால் தனது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கூடிய ஒரு அரசியல் விழிப்புணர்வுமிக்க சமூகம் உருவாகும் நிலையும் இல்லாமல் போகின்றது. அரசு பரிந்துரைத்த எத்தனயோ விடயங்களை அது அமுலாக்கமால் உறங்கிக்கிகொண்டிருக்கும் வேளையில் அதனை இயக்கம்பெறச்செய்யும் செயற்பாடுகள் கைவிடப்பட்டு, தர்ம சிந்தணை மேலோங்கியிருப்பது மிகக்கவலைக்குரிய விடயமாகும்.

வீதிக்குப்பையை அகற்றுவது நகர,பிரதேச சபையின் பொறுப்பு. சமூக அக்கறை மக்களிடம் தாராளமாக காணப்படுவதென்பதற்காக சமூக நலன் விரும்பிகள் பொதுமக்களை பயன்படுத்தி குப்பையை அகற்ற வைப்பது பொருத்தமான செயலல்ல. கடமை தவறிய அரச நிறுவனத்தை இயங்க வைப்பது பற்றி சிந்தித்து அதற்கான செயற்பாடுகள் செய்வதுதான் சமூக சேவை. பொது மக்களிடம் சாந்தி, சமாதனம், விடுதலைக்கான வேட்கை அதிகமுள்ளதென்பதற்காக யுத்தத்திற்கு அவர்களை அனுப்புவதில்லை அது இராணுவம் செய்ய வேண்டிய வேலை. பொதுமக்களை யுத்தக்களத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு இராணுவத்தை உறங்கச்சொல்வதை எண்ணி பெருமிதமடைதளல்ல சமூகத்தலைமைகளின் வேலை.

“அரசு தன்னால் முடிந்தவற்றை செய்து கொண்டுதான் இருக்கின்றது” பொதுமக்கள் ஆகிய நாங்களும் எங்கள் தாய் நாட்டிற்காக எங்களால் முடிந்தவற்றை செய்வோம் என்று சொல்லும் ஒரு சாரார் எமது சமூகத்தில் இருக்கிறாக்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசு என்பது. நான்கு ஐந்து பெயரின் சந்தா பணத்தில் இயங்கி வரும் நலன்புரிச்சங்கமல்ல, முழு நாட்டு மக்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு நாட்டை நிருவகிக்கும் ஒரு சக்திவாய்ந்த நிறுவனம். அது நிறைவேற்ற வேண்டிய மக்களின் அடிப்படைத்தேவைகளையும் கைவிடும்போது கேள்விற்குட்படுத்தப்படவேண்டிய விடயமே தவிர தன்னால் முடிந்தவற்றை செய்கிறது என்று நியாயப்படுத்தும் விடயமல்ல. குறித்த நியாயப்படுதல் அரசை இன்னும் ஊழல் மிக்க சோம்பேறியாக மாற்றுவிடுகின்றது.

சமூக சேவை என்பது சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வை நோக்கிய வேலைத்திட்டங்கள் செய்வதும் அதற்காகன விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதுமாகும்.